தாழ்த்தப்பட்டோர் உரிமை மீட்பில் திராவிடர் இயக்கம்!


தந்தை பெரியார் அவர்கள், டாக்டர் அம்பேத்கர் அவர்களையும், அவரது அறிவுசார் படைப்புகளையும் தென்னகத்தில் அறிமுகப்படுத்தி, அவரது பெரும் பணிக்குப் பெரிதும் துணை நின்றார். சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும் தொடர்ந்து வரும் திராவிடர் இயக்கங்களும், தாழ்த்தப்பட்டோர் அடிமை விலங்கொடிக்க, அறிவாளர் அம்பேத்கர் அவர்களுடன் இணைந்து களத்தில் நின்று போராடினார்கள் என்பதுதான் தமிழகத்தின் கடந்த நூறாண்டு கால வரலாறு!
1899-ஆம் ஆண்டில் சென்னையில் ஒற்றைவாடைத் தியேட்டரில் புராண நாடகம் ஒன்று நடைபெற்றது. நாடகத்தை நடத்திய கம்பெனியினர், நாடகக் கதைச் சுருக்கத்தினை வெளியிட்டு துண்டறிக்கை வாயிலாக விளம்பரம் செய்தனர். அந்தத் துண்டறிக்கையில் நாடகம் பார்ப்பவர்களுக்கான, நாற்காலி, பெஞ்சு, சோபா, தரைக் கட்டணங்களைக் குறிப்பிட்டு, இறுதி வாசகமாக, ‘பஞ்சமர்களுக்கு இடமில்லை, மீறி உள்ளே நுழைபவர்கள் போலீசில் ஒப்படைக்கப் படுவார்கள்’ என்று கொட்டை எழுத்துகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைப் போலேவே 1935-ஆம் ஆண்டில், கும்பகோணத்தில் பார்ப்பனர்கள் வசித்து வந்த அக்கிரகாரத்தில், கழிவறையைச் சுத்தம் செய்ய தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதிலாக, மற்ற சாதியினரையே நியமிக்க வேண்டும் என்று மலம் எடுக்கக் கூட உள்ளே வரக் கூடாது என்ற மனு தர்மக் குரலை நகராட்சி நிர்வாகமும் ஏற்றுக் கொண்ட கொடுமையும் அப்போது நடைமுறையில் இருந்தது! உத்தமர் காந்தியடிகள் 15.9.1927 அன்று தஞ்சை மாவட்டம், மன்னார்குடியில் தேசிய உயர் நிலைப்பள்ளியின் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்து விடைபெற்றுச் செல்லும்போது, பள்ளித் தலைமை ஆசிரியரான பார்ப்பனரிடம் இந்தப் பள்ளியில் எத்தனை தாழ்த்தப்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள் என்று வினவினார். ஒரு மாணவனைக் கூட இதுவரை சேர்க்கவில்லை என்ற தலைமை ஆசிரியரின் விடை, காந்தியடிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது! 1938-ஆம் ஆண்டில் நீடாமங்கலத்தில் காங்கிரசு கட்சியின் மாநாடு நடைபெற்றது. மாநாட்டை முன்னிட்டு சமபந்தி விருந்து நிகழ்ச்சியும் நடைபெற்றது. பார்ப்பனரல்லாத பிற சாதியினர் மட்டுமே சாப்பிட வேண்டும் என்ற விதியைத் தெரியாமல் மூன்று ஆதி திராவிட காங்கிரÞ தோழர்கள் விருந்தில் சாப்பிட்டு விட்டார்கள். அவர்களை மொட்டை அடித்து மரத்தில் கட்டிவைத்து அடித்து தண்டித்த சம்பவம், காங்கிரசின் தீண்டாமை ஒழிப்பு நாடகத்தின் உண்மை நிலையைத் தோலுரித்துக் காட்டியது! 1940-ஆம் ஆண்டில், சென்னை வில்லிவாக்கத்தில் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளில் வாழ்ந்தவர்களுக்கு வந்த கடிதங்களையெல்லாம், அந்த ஊர் எல்லையில் இருந்த கோயிலில், அஞ்சல்காரர்கள் வீசி எறிந்துவிட்டுப் போய் விடுவார்கள். ஆதிதிராவிட மக்கள் அங்கு கிடக்கும் அஞ்சல்களைத் தேடி எடுத்து அவரவர்களுக்கு உரியதை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது எழுதப் படாத சட்டமாகச் செயல்படுத்தப் பட்டிருக்கின்றது. இப்படிப்பட்ட சாதிய அடக்குமுறைகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஏவிவிடப்பட்ட போதெல்லாம் தந்தை பெரியார் அவர்கள் இதனைக் கண்டித்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்கப் போராடினார். குடியரசு ஏடு தலையங்கம் தீட்டியும், கட்டுரைகளை வெளியிட்டும், தாழ்த்தப்பட்டோரின் குரலாய் ஒலித்தது. சுயமரியாதை இயக்கம் தாழ்த்தப் பட்டவர்களைக் கைதூக்கிவிட மாநாடு கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆட்சியாளர்களிடம் முறையிட்டது. நீதிக்கட்சி அரசு அவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்தி, ஆதிதிராவிட மக்களின் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்தது; வென்றெடுத்தது! தாழ்த்தப்பட்ட மக்களைப் ‘பறையன்’ என்றே அரசின் அனைத்து ஆவணங்களிலும் இழிவாகக் குறிப்பிடப்பட்டதைத் தடுத்து நிறுத்தி, ‘ஆதிதிராவிடர்’ என்ற வரலாற்றுச் சிறப்புக்குரிய இனத்தின் பெயரால் அவர்கள் குறிப்பிடப்பட வேண்டும் என்று சென்னை மாநகராட்சியில், நீதிக்கட்சித் தலைவர் டாக்டர் சி. நடேசனார் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்; ஏற்கச் செய்தார். இதன் தொடர் நடவடிக்கையாக தமிழக சட்டமன்றத்திலும் இதற்காக நீதிக்கட்சியினர் செயலில் ஈடுபட்டார்கள். 20.01.1922 அன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் எம்.சி. இராசா அவர்கள் ‘ஆதிதிராவிடர்’ பெயர் மாற்றத் தீர்மானத்தை முன்மொழிந்தபோது, நீதிக்கட்சியின் சார்பில் ராவ் பகதூர் நம்பெருமாள் (செட்டி) அதனை வழிமொழிந்தும், வைரம் பிள்ளை ஆதரித்துப் பேசியும் தீர்மானத்தை நிறைவேற்ற வற்புறுத்தினார்கள். நீதிக்கட்சி அரசு, அனைத்து அரசு ஆவணங்களிலும் ‘ஆதிதிராவிடர்’ என்றே குறிப்பிட வேண்டும் என்று ஆணையிட்டது. தமிழ்நாட்டில் ‘பேருந்துகளில் பஞ்சமர்களுக்கு இடமில்லை’ என்ற அறிவிப்பும், இதே வாசகங்கள் பயணச் சீட்டின் பின்புறத்தில் அச்சடிக்கப்பட்டும் ஆதிதிராவிடர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்த கொடுமைக்கு முதன்முதலாக முடிவு கட்டிய பெருமை சுயமரியாதை இயக்கத் தலைவர், பட்டிவீரன்பட்டி W.P.A. சௌந்திரபாண்டியனாருக்கு மட்டுமே உண்டு. அன்றைக்கு ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டமாக இருந்த முகவை மாவட்டத்தின் மாவட்ட ஆட்சிக் குழுத் தலைவராக இருந்த சௌந்திர பாண்டியனார் அவர்கள், ஆதி திராவிடர்களை அனுமதிக்காத பேருந்துகளின் உரிமம் பறிக்கப்படும் என்று ஆணை பிறப்பித்து, அவர்களையும் சமமாகப் பிற சாதியினருடன் அமரச் செய்து அமைதிப் புரட்சியை ஆரவாரமின்றி அரங்கேற்றிக் காட்டினார்! பட்டுக்கோட்டை தாலுக்கா போர்டுக்கு, அந்த ஊரின் மேற்குத் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து என்ற தாழ்த்தப்பட்ட தோழரும் உறுப்பினரான நிலையில், போர்டு கூட்டத்தினைக் கூட்டினால், அவருக்கும் சமமாக இடம் தர வேண்டுமே என்ற எண்ணத்தில், போர்டு கூட்டத்தையே கூட்டாமல், தலைவர் ஒத்தி வைத்துக் கொண்டே இருந்தார். சுயமரியாதைச் சங்கத்தினர் இதனைக் கண்டித்துக் கூட்டங்களை நடத்தி, போராட்ட அறிவிப்புகளையும் வெளியிட்டார்கள்; முதல்வர் டாக்டர் சுப்பராயன் அவர்களிடமே முறையிட்டார்கள். தாலுக்கா போர்டு கூட்டத்தைக் கூட்டாவிட்டால், தாலுக்கா போர்டு நிர்வாகத்தையே கலைத்து விடப் போவதாக முதல்வர் எச்சரிக்கை செய்தார். இதன் விளைவாக தாலுக்கா போர்டு கூட்டம் கூட்டப்பட்டது. மாரிமுத்து அவர்களுக்கும் சரியாசனம் தந்து சிறப்பிக்கப்பட்டது. கோவில்களில் உள்ள வானளாவிய கோபுரங்களை, வீதியில், தொலைவில் நின்று வணங்க வேண்டுமே தவிர கோவில்களுக்கு அருகிலோ உள்ளேயோ வரக் கூடாது என்று ஆதி திராவிடர்களை ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சமூகக் கொடுமைக்கு எதிராகவும் சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும் கோவில் நுழைவுப் போராட்டங்களை நடத்தியது. திருச்சி மலைக்கோட்டை கோயிலில் ஆதிதிராவிட மக்களை அழைத்துக் கொண்டு ஆலய வழிபாட்டுக்குச் சென்ற நீதிக்கட்சித் தலைவர்களான கே.வி. இராமநாதன், டி.வி. சுப்ரமணியன் ஆகியோர் மலைப்படிகளில் இருந்து உருட்டி விடப்பட்டு மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டார்கள். ஈரோடு கோயில் கருவறைக்குள்ளே ஆதிதிராவிடர்களை அழைத்துச் சென்ற மாயூரம் நடராசன், பட்டுக்கோட்டை அழகிரி உள்ளிட்ட சுயமரியாதை இயக்கத்தவர்களை உள்ளே வைத்துப் பூட்டி சிறைவைத்த கொடுமையும் அந்தக் கால கட்டத்தில் நடந்தது. இதனைத் தொடர்ந்துதான் ஆலய நுழைவுப் போராட்டம் வீறுகொண்டெழுந்தது! ஆதிதிராவிட மக்கள் தெருக்களில் நடந்தாலே தீட்டு என இழிவுக்கு ஆளாக்கப்பட்டதை மாற்றி, எல்லா தெருக்களிலும் அவர்கள் நடக்கலாம் என்பதற்கே ஆணை பிறப்பித்த அரசு நீதிக்கட்சி அரசு! இந்தியாவிலேயே தாழ்த்தப்பட்டோருக்கு என முதல் அமைச்சகத்தை, நீதிக்கட்சி அரசின் முதல்வர் பனகல் அரசர் அவர்கள்தான் உருவாக்கி, அவர்களை அமைச்சர்களாக்கி உயர்த்திப் பெருமை சேர்த்தார்! சட்டமன்றத்தில் தாழ்த்தப்பட்டவர் களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் ஒதுக்கீடு செய்து அவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஆங்கிலேயே அரசிடம் வற்புறுத்து வதற்காக, நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டி.எம். நாயர் 1918-ஆம் ஆண்டு தம் சொந்தச் செலவில் லண்டன் சென்றார். ஆங்கிலேய அரசு, டாக்டர் நாயர் அவர்களின் கருத்துப் பிரச்சாரத்துக்குத் தடைசெய்து முட்டுக்கட்டையிட்டது. தளர்ச்சி காணாத நாயர் அவர்கள், தனித்தனியாக ஆங்கிலேய அதிகாரிகளையெல்லாம் சந்தித்து, தடையை நீக்கச் செய்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டு சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தார். வகுப்புரிமையின் பெயரால் இன்று தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்கள் பெற்று வரும் வாய்ப்புகளுக்கு அடித்தளமிட்ட பெருமை டாக்டர் நாயர் அவர்களுக்கு மட்டுமே உண்டு. நீதிக்கட்சியின் அதிகாரபூர்வ ஏடான ‘திராவிடன்’ ஏடு (3.11.1917) தலையங்கத்தில் “தொடப்படாதவர்கள் என்றும் அணுகப்படாதவர்கள் என்றும், தாழ்ந்தவர்கள் என்றும் தூற்றப்படும் பறையர், பள்ளர், புலையர், தீயர் முதலான நம் சகோதரர்களும் கல்வியில் பெரிதும் பயின்று நல் ஒழுக்கமும், நல் ஆச்சாரமும், நன்னாகரிகமும் அடைந்து. இந்து ஜன சமுதாயத்தில் பிற சாதியோர்களோடு சமத்துவத்தைப் பெற்று அவர்கள் அனுபவிக்கும் உரிமைகளையும், சுதந்திரங்களையும் அனுபவிக்க நாளுக்கு நாள் இடைவிடாமல் முயன்று நம் இந்திய நாடு சுய ஆட்சி பேற்றுக்குப் பக்குவமுடையோராக்கச் செய்வார்களாக!” என சுட்டிக்காட்டி இருப்பதில் இருந்து தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்தில் நீதிக்கட்சியின் ஆவலையும், அக்கறையையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம். பேராசிரியர் லட்சுமிநரசிம்மு என்பவர் திராவிட இயக்கத்தின் சீரிய சிந்தனையாளர்; சென்னை கிறித்துவக் கல்லூரியிலும், பச்சையப்பன் கல்லூரியிலும் இயல்பியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய அறிவாளர். பாரதியாரால் எனது நாத்திக நண்பர் என்று பெருமைப்படுத்தப்பட்டவர்; சுவாமி விவேகானந்தரை சென்னையில் (1897) சந்தித்து சுயமரியாதை இயக்கத்தின் சிறப்புகளை எடுத்து வைத்தவர். இத்தகைய பல்துறை விற்பன்னரான லட்சுமி நரசிம்மு 4.11.1917 அன்று சென்னையில் நடைபெற்ற பௌத்த மாநாட்டில் நிகழ்த்திய உரையினை திராவிடன் ஏடு (8.11.1917) வெளியிட்டது. அரசியல் விடுதலையை விட சமுதாய விடுதலையே முதலில் நாம் அடைய வேண்டியது என்பதை விளக்கி அப்போது உரையாற்றினார். “சாதி ஒழிய வேண்டும். அப்போதுதான் மக்கள் ஒன்றுபட்டு அன்பு வாழ்க்கை நடத்துவார்கள். மாறுபாடு இல்லா ஒற்றுமையும், ஒழுக்கமும் வந்த பின்னரே ஹோம் ரூல் நன்றென்றும் மக்கள் தம்மில் பிரிவுபட்டு, பிளவுபட்டு ஒருவரிடத்தே ஒருவர் துவேசம் பாராட்டி, குரோதமும், வன்மையும், இன்னும் தேச முன்னேற்றத்திற்குச் சிறிதும் பொருந்தாத இழிகுணங்களும் எல்லோருள்ளத்தும் வேரூன்றியிருக்கும் இப்போது ஹோம் ரூல் கொடுக்கப்படுமாயின் தேசத்தில் எங்கு பார்த்தாலும் குழப்பம் உண்டாகும் என்று தெள்ளத் தெளிவாக விளக்கி எல்லோரும் இன்ப வெள்ளத்தில் மூழ்கும்படி பேசி முடித்தார்” என்ற திராவிடன் இதழின் செய்தி, சாதி ஒழிப்பிலும், சமத்துவம் காண்பதிலும் நமது இயக்கம் கொண்டிருந்த பேரார்வத்தை எடுத்து விளக்குகிறது. “பஞ்சமர்களை விட்டுவிட்டு, ஏனைய பிராமணர் அல்லாதார் மாத்திரம் முன்னேறி விட வேண்டும் என்று தென்னிந்திய மகாஜன சங்கமும், திராவிடன் அபிமானிகளும் கருதுபவர்கள் அல்லர்” என்ற திராவிடன் இதழின் (10.9.1917) கட்டுரை ஆதிதிராவிடர்களையும் இணைத்துக் கொண்டு சமத்துவத்திற்கான போராட்டத்தில் திராவிடர் இயக்கம் போராடிய பாங்கினை விளக்குகிறது. “பிராமணரல்லாத நம்மவருள் உள்ள சாதி வித்தியாசங்களைப் போக்கி நம்மவரையெல்லாம் ஒற்றுமைப்படுத்தி நலம் பெறச் செய்யவே பிராமணர் அல்லாதார் இயக்கம் தோன்றியுள்ளது. பஞ்சமர் முன்னேற்றத்திற்கான பல கட்டுரைகளையும் தலையங்கங் களையும் செய்திகளையும் “திராவிடன்” வெளியிட்டு வலியுறுத்தியது சிறப்பாகக் குறிப்பிட வேண்டிய பங்களிப்பாகும். (பக்கம் 329) என்ற The Non Brahmin’s up neavel and caste differences ஆங்கில நூலின் கருத்து, திராவிடன் இதழும் நீதிக்கட்சியும் தாழ்த்தப்பட்டோர் உயர்வுக்காக ஆற்றிய அளப்பரிய சேவைகளைக் குறிப்பிட்டு பாராட்டியது. இதே தன்மையில்தான் திராவிடர் இயக்கம் தன் இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. திராவிடர் இயக்க நூற்றாண்டு தொடர்ந்திடும் இவ்வேளையில், அம்பேத்கர் பிறந்தநாளுக்கு தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கவும், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவர் படம் இடம் பெறவும், அம்பேத்கரின் இலட்சியத் தோழர் இரட்டைமலை சீனுவாசனுக்கு அஞ்சல்தலை வெளிவரவும் குரல் கொடுத்து சாதனைச் சரித்திரம் படைத்த இலட்சியத் தலைவர் வைகோ அவர்களைத் தலைவராகக் கொண்டுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் பெருமையுடன் - அரிமா நோக்கில் - தாழ்த்தப்பட்டோர் உரிமை மீட்புக்கான நம் பணிகளை நினைவுகூர்வோம்!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment